கீதங்களும் கீர்த்தனைகளும் 92
1. இரக்கமுள்ள மீட்பரே,
நீர் பிறந்த மா நாளிலே
ஏகமாய்க் கூடியே நாங்கள்
ஏற்றும் துதியை ஏற்பீரே.
2. பெத்தலை நகர் தனிலே
சுத்த மா கன்னிமரியின்
புத்திரனாய் வந்துதித்த
அத்தனே மெத்த ஸ்தோத்திரம்!
3. ஆதித் திரு வார்த்தையான
கோதில்லா இயேசு கர்த்தனே,
மேதினியோரை ஈடேற்ற
பூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்!
4. பாவம் சாபம் யாவும் போக்க,
பாவிகளைப் பரம் சேர்க்க,
ஆவலுடன் மண்ணில் வந்த
அற்புத பாலா ஸ்தோத்திரம்!
5. உன்னதருக்கே மகிமை,
உலகினில் சமாதானம்,
இத்தரை மாந்தர்மேல் அன்பு
உண்டானதும்மால், ஸ்தோத்திரம்!
6. பொன் செல்வம் ஆஸ்தி மேன்மையும்
பூலோக பொக்கிஷங்களும்
எங்களுக்கு எல்லாம் நீரே;
தங்கும் நெஞ்சத்தில், ஸ்தோத்திரம்!
Comments
Post a Comment